வெள்ளி, 29 மே, 2020

குமரி மாவட்டசெய்தி துளிகள் சில


✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .

வியாழன், 21 மே, 2020

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


தாழக்குடி மேலகாலனி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி தாசம்மாள் (44). சம்பவத்தன்று தாசம்மாள் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் தாசம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசம்மாள், பாஸ்கரனின் தந்தை கிறிஸ்துதாஸிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தாசம்மாள் தரப்பினரும், கிறிஸ்துதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ், அவருடைய மனைவி மார்த்தாள், மகன்கள் பாஸ்கர், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல கிறிஸ்துதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், அவருடைய மனைவி தாசம்மாள், மகன்கள் சாருஹாசன், சுனில் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 18 மே, 2020

தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை



குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு



திருவட்டார் அருகே செறுகோல் குற்றிமாவிளையில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலையில் ஆலயத்தை சுத்தம் செய்வதற்காக சபை பணியாளர் ராபின் சென்றார். அப்போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, ஆலயத்தின் பின்பக்கத்தில் உள்ள அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற மின்சார பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மூடை கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். மேலும், சில பொருட்களை மூடை கட்டி விட்டு கொண்டு செல்ல முடியாததால் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சபை செயலாளர் சிம்சோன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஞாயிறு, 17 மே, 2020

குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் காமராஜர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மழை காரணமாக சாஸ்தான்கரையில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக கார், டெம்போ போன்ற வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுமரங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மழை, காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.



வெள்ளி, 15 மே, 2020

விபத்தில் 2 பேர் காயம்



இரணியல் அருகே நெய்யூர் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பின்னால் அவர் நண்பர் ரவீந்திரன் உட்கார்ந்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், ரவீந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தக்கலை மணலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வியாழன், 14 மே, 2020

மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது



மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 38), தொழிலாளி. இவர், 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை தேடி வந்தனர். இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரெஜியை கைது செய்தனர்.

செவ்வாய், 12 மே, 2020

குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு





குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தடுப்பு பணிகளை செய்து வரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கொரோனா வைரசுடன் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும், வைரஸ் மக்களை தாக்காமல் இருக்க உழைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




திங்கள், 11 மே, 2020

திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை



மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 38). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே விஜயகுமார் கடன் வாங்கி வீடு கட்டினாராம். இதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





ஞாயிறு, 10 மே, 2020

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் பலி:

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு



விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 11 பேர் இறந்தனர். இதுபோல், அவுரங்கபாத்தில் ரெயிலில் அடிபட்டு 15 தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவங்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். குமரி மாவட்ட லெனினிஸ்டு செயலாளர் அந்தோணிமுத்து ரீத்தாபுரத்தில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடியேந்தி துக்கம் அனுசரித்தார்.


நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை



நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கை கழுவுதல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஓவிய கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளோம். இந்த ஓவியங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பு தற்போது முடியக் கூடியதாக இல்லை. எனவே மக்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதோடு மரத்தில் ஆணி அடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் விளம்பர நோட்டீஸ் அச்சடித்து வினியோகம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 8 மே, 2020

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிளசட் சேம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எமி கிராம்டா. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடையார்விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்ப வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

வியாழன், 7 மே, 2020

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நோன்பை முன்னிட்டு முதல் கட்டமாக 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவர் இப்ராகீம்கான், பொதுச்செயலாளர் பி.ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ஆர்.ஹாஜிபாபு, இளைஞர் அணி தலைவர் அயூப்கான், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஜாகிர், சேக் முகமது, பசுலுல் கரீம், நவாஸ், சலீம், சேக் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி மீது தாக்குதல்



ஆரல்வாய்மொழி அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மோதலை விலக்கி விட சென்றனர்.
அப்போது, கார்த்திக்கும் அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து ‘ இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்கள்தான்’ எனக்கூறி கண்ணனையும் அவரது மனைவியையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கள்ளக்காதலி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதன், 6 மே, 2020

சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சளி, ரத்தம் மாதிரி எடுத்த பிறகு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈசாந்திமங்கலத்தில் ஒரு வீடு, பூதப்பாண்டியில் 2 வீடு, திட்டுவிளையில் 2 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, அங்கு 8 பேர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது




கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்த போது பிரபின் ஆன்டனி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து பிரபின் ஆன்டனியை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

திங்கள், 4 மே, 2020

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் 

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், கிரீசன் ஆகியோர் முன்னிலையில் 250 முக கவசங்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாளிடம் வழங்கப்பட்டது. போலீசார், அந்த முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.



ஞாயிறு, 3 மே, 2020

கள்ளச்சாராயம் விற்றவர் கைது





மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் குமாரகோவில் அருகே உள்ள வேளிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆனைக்கல் ஓடையில் நாகக்கோடு காட்டு குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 53) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்வகுமார் கள்ளச்சாராயத்தை நீண்ட காலமாக காய்ச்சி விற்றது தெரிய வந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராய ஊறலையும் அவர்கள் கைப்பற்றி அழித்தனர்.


சனி, 2 மே, 2020

நாகர்கோவிலில் முக கவசம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூல்

நாகர்கோவிலில்

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 



நாகர்கோவிலில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் பகுதியில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



வெள்ளி, 1 மே, 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாககுமரியில் 37 நாட்களில் 6,708 வழக்குகள் பதிவு5,282 வாகனங்கள் பறிமுதல்





கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தேவையின்றி வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 75 வழக்குகள் பதிவு செய்து, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை 37 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...